Solomon Pappaiah: புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவையடுத்து, அவரது உடல் மதுரையில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
90 வயதான சாலமன் பாப்பையா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 11ஆம் தேதி மதுரையில் காலமானார். அவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள், பேச்சாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் அஞ்சலி
மதுரை ஞானஒளிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழறிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பல ஆண்டுகளாக பட்டிமன்ற மேடைகளில் தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும், தெளிவான தீர்ப்புகளாலும் தமிழ் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருந்த சாலமன் பாப்பையாவின் மறைவு, அவருடன் பயணித்தவர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சாலமன் பாப்பையாவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்கும் நடைமுறை இல்லாமல், கௌரவ அரசு மரியாதை வழங்கப்பட்டது.
தமிழ் உலகில் நீங்கா இடம்
சாலமன் பாப்பையா தமிழ் பேராசிரியராக தனது பணியைத் தொடங்கி, பின்னர் பட்டிமன்ற நடுவராக புகழ்பெற்றார். அவரது தனித்துவமான பேச்சு பாணி மற்றும் நகைச்சுவை உணர்வு காரணமாக பல தலைமுறை தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக்கு அவர் செய்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசின் கலைமாமணி விருதும், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் பட்டிமன்ற உலகில் தனக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கிய சாலமன் பாப்பையாவுக்கு, மதுரை மண்ணில் அரசு மரியாதையுடன் இறுதி விடை கொடுக்கப்பட்டுள்ளது.

