செப்டம்பர் மாதம் தொடங்கும் நிலையில், பொதுமக்களின் அன்றாட செலவுகள் மற்றும் நிதி நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
சமையல் எரிவாயு விலை முதல் வங்கி சேவைகள், விமானப் பயணம், கார் விலை என பல துறைகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சமையல் எரிவாயு விலையில் மாற்றம்
ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மறுஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 19 கிலோ வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.202 குறைக்கப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
சிலிண்டர் e-KYC
சமையல் எரிவாயு இணைப்புக்கான e-KYC செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் e-KYC செய்யாதவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் சிலிண்டர் பெறுவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் அல்லது அதிக விலை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானப் பயணத்தில் புதிய நடைமுறை
செப்டம்பர் 1 முதல் சர்வதேச பயணிகளுக்கான குடியேற்றச் சோதனை நடைமுறையிலும் மாற்றம் வருகிறது. போர்டிங் பாஸில் முத்திரை பெறுவதற்காக தனியாக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. பயணிகள் தங்களது மொபைலில் உள்ள e-Boarding Pass அல்லது அதன் அச்சுப் பிரதியை பயன்படுத்தி குடியேற்றச் சோதனையை மேற்கொள்ள முடியும்.
விமான எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள்
விமான எரிபொருளான ATF-ன் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றப்படலாம். இதில் ஏற்படும் மாற்றம் விமானக் கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதேபோல் CNG மற்றும் PNG விலைகளிலும் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
டாடா கார்கள் விலை உயர்வு
செப்டம்பர் 1 முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மற்றும் SUV மாடல்களின் விலை ரூ.25,000 வரை உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் வாகனங்களுக்கும், மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும். மாடலுக்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும். இதேபோல் ஹூண்டாய் நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
வங்கி FD வட்டி விகிதங்களில் மாற்றம்
செப்டம்பர் மாதத்தில் வங்கிகளின் நிலையான வைப்பு (FD) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களிலும் மாற்றம் ஏற்படலாம். வட்டி குறைக்கப்பட்டால் முதலீட்டாளர்களின் வருமானம் குறையக்கூடும்; வட்டி உயர்த்தப்பட்டால் கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, புதிய FD முதலீடு செய்வோர் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு முடிவு செய்வது அவசியம்.
ஏடிஎம் கட்டணங்களில் மாற்றம்
செப்டம்பர் 1 முதல் ஏடிஎம் பணப் பரிவர்த்தனை கட்டணங்களிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச பரிவர்த்தனை வரம்பைத் தாண்டி அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்துபவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
மொத்தத்தில், செப்டம்பர் மாதம் தொடங்குவதுடன் குடும்ப பட்ஜெட், வங்கி சேவைகள், பயணம் மற்றும் வாகனச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு மாற்றங்கள் வர உள்ளதால், பொதுமக்கள் அவற்றை கவனத்தில் கொண்டு தங்களது நிதி நடவடிக்கைகளை திட்டமிடுவது நல்லது.

