தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு ஊழல் விவகாரங்களை சுட்டிக்காட்டி அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டிய விஜய்
கடந்த கால விசாரணை ஆவணங்கள் மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை குறிப்பிட்ட விஜய், வீராணம் குழாய் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த விவகாரங்கள் தொடர்பான ஆதாரங்கள் சட்டப்பேரவை நூலகத்தில் இருப்பதாகவும் விஜய் கூறினார்.
கட்சி நிதி தொடர்பாகவும் குற்றச்சாட்டு
திமுகவின் கட்சி நிதி வசூல் தொடர்பாகவும் அமலாக்கத்துறை முன்வைத்ததாகக் கூறப்படும் தகவல்களை விஜய் தனது உரையில் குறிப்பிட்டார். குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒப்பந்தங்கள் மற்றும் கட்சி நிதி தொடர்பாக சதவீத அடிப்படையில் பணம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், டாஸ்மாக் துறையுடன் தொடர்புடைய சில அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாகவும் அமலாக்கத்துறை விசாரணையில் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக விஜய் கூறினார்.
“மேலும் பல கோப்புகள் திறக்கப்பட்டால்…”
தற்போது சில துறைகள் தொடர்பான கோப்புகளை மட்டுமே எடுத்துப் பார்த்தபோதே பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளதாக கூறிய விஜய், இன்னும் பல கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டால் கூடுதல் விவரங்கள் வெளிச்சத்துக்கு வரலாம் என தெரிவித்தார்.
“ஊழல் இருக்கும் இடத்தில் திமுக இருக்கும்” என்ற வகையில் திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ஆட்சி, சட்டம்-ஒழுங்கு குறித்த விமர்சனம்
சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன்பு, கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களையும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று விஜய் கூறினார்.
மேலும், அரசியல் கருத்துகளை தெரிவிப்பதற்கும் பெண்களை அவதூறாக பேசுவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பெண்களுக்கு எதிரான அவதூறு மற்றும் ஆபாசப் பேச்சுகள் தொடர்பாக சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் தெரிவித்தார்.
மக்களுக்காகவும், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே தான் அரசியலுக்கு வந்துள்ளதாக விஜய் தனது உரையில் தெரிவித்தார்.

