காலையில் பஞ்சு போன்ற மென்மையான இட்லி சாப்பிட வேண்டும் என்றால், இட்லி மாவு சரியாக புளிப்பது மிகவும் முக்கியம். ஆனால், சில நேரங்களில் இரவு முழுவதும் வைத்திருந்தாலும் மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும். இதற்கு சமையலறையில் நாம் செய்யும் சில சிறிய தவறுகளே காரணமாக இருக்கலாம்.
1. குறைந்த வெப்பநிலை
இட்லி மாவு நன்றாக புளிக்க வெதுவெதுப்பான சூழல் தேவை. குறிப்பாக குளிரான காலநிலை அல்லது ஏசி அறையில் மாவை வைத்தால் நொதித்தல் செயல்முறை மெதுவாகலாம்.
என்ன செய்யலாம்?
மாவை சற்று வெப்பமான இடத்தில் வைக்கலாம். சமையலறையில் வெப்பம் இருக்கும் பகுதி அல்லது பயன்படுத்தாத மைக்ரோவேவ் ஓவனுக்குள் வைப்பது உதவியாக இருக்கலாம்.
2. அரிசி – உளுந்து விகிதத்தில் தவறு
மாவு புளிப்பதில் உளுந்துக்கு முக்கிய பங்கு உள்ளது. அரிசியின் அளவு அதிகமாகவும், உளுந்தின் அளவு குறைவாகவும் இருந்தால் மாவு போதுமான அளவு மேலெழாமல் போகலாம்.
புதிய மற்றும் தரமான உளுந்தைப் பயன்படுத்தி, அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக ஊறவைத்து அரைப்பது நல்லது. பொதுவாக 3:1 என்ற விகிதம் பயன்படுத்தப்படுகிறது.
3. உளுந்தை சரியாக அரைக்காதது
உளுந்தை மென்மையாகவும் காற்று கலந்ததாகவும் அரைப்பது அவசியம். அரைக்கும் போது அதிக வெப்பம் உருவானாலும் நொதித்தலுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
எனவே, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உளுந்தை நன்றாக நுரைபோல் அரைப்பது மாவு நன்றாக எழுவதற்கு உதவும்.
4. அதிக உப்பு சேர்ப்பது
மாவை அரைக்கும் போதே அதிக அளவு உப்பு சேர்ப்பது நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை பாதித்து புளிப்பு தாமதமாக காரணமாகலாம்.
அதனால் மாவை அரைத்து முடித்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்ப்பது சிறந்தது. உப்பின் அளவும் அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. மாவின் பதம் சரியாக இல்லாதது
மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது அதிகமாக தண்ணீர் கலந்ததாகவோ இருந்தால் நொதித்தல் பாதிக்கப்படலாம். எனவே, இட்லி ஊற்றுவதற்கு ஏற்ற மிதமான பதத்தில் மாவை வைத்திருக்க வேண்டும்.
மேலும், தண்ணீரின் தன்மையும் மாவு புளிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சுத்தமான அல்லது வடிகட்டிய தண்ணீரைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கலாம்.
மாவு புளிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்?
காலையில் மாவு புளிக்காமல் இருந்தால் உடனடியாக அதை தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை. முதலில் அதை வெப்பமான இடத்திற்கு மாற்றி மேலும் சில மணி நேரம் வைத்துப் பார்க்கலாம்.
அதன்பிறகும் மாவு புளிக்கவில்லை என்றால், சிறிதளவு புளித்த தயிர் அல்லது தேவையான அளவு பேக்கிங் சோடா சேர்த்து இட்லி தயாரிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. இது தற்காலிகமான தீர்வாக மட்டுமே கருதப்படுகிறது.
மாவை இட்லிக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும், அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பதத்தை மாற்றி தோசை, ஊத்தப்பம் அல்லது பணியாரம் தயாரிக்கலாம்.
புளித்த மாவை எப்படி கண்டுபிடிப்பது?
நன்றாக புளித்த இட்லி மாவின் அளவு அதிகரித்து, அதில் சிறிய குமிழ்கள் காணப்படும். லேசான புளிப்பு வாசனையும், மாவில் காற்று கலந்த மென்மையான தன்மையும் இருக்கும். இவை மாவு சரியாக புளித்திருப்பதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.

