ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி சீனாவிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டின் டிக்டாக் செயலி இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றிருந்தார். தலைநகர் டோக்கியோவில் அவருக்கு அந்நாட்டின் சார்பில் சகல மரியாதைகளும் அளிக்கப்பட்டன. ஜப்பான் பிரதமர் மற்றும் 16 மாகாண ஆளுநர்கள், தலைநகர் டோக்கியோவில் மோடியைச் சந்தித்துப் பேசினர்.
மோடி சீனா பயணம்
இதையடுத்து தனது ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சீனாவின் தியான்ஜின் நகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் மோடி. அங்கு நாளை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (எஸ்.சி.ஓ) மோடியும் பங்கேற்கிறார்.
கடைசியாக இதே மாநாட்டில் பங்கேற்பதற்காக, 2018 ஜூனில் தான் மோடி சீனா சென்றிருந்தார். நாளையும் நாளைமறுதினமும் மாநாட்டில் பங்கேற்கும் மோடி, சீன அதிபர் ஜிங்பிங்கையும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது. அப்போது அமெரிக்காவின் வர்த்தகப் போர் குறித்து மூன்று தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2019 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா இடையே சண்டை நடந்தது. அதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அன்றுடன் முடிந்திருந்த சீனா உடனான இந்திய உறவு, இப்போது புதுப்பிக்கப்படலாம் என்று தெரிகிறது.
டிக்டாக் தடையும் ஆள்சேர்ப்பும்
அந்த நேரத்தில் இந்தியாவில் மிக வேகமாக இளைஞர்களிடம் வேரூன்றி கிடந்த சீனாவின் டிக்டாக் செயலி உள்பட 58 செயலிகளுக்கு, தரவுப் பாதுகாப்பைக் காரணம் காட்டி இந்தியா தடை விதித்தது.
இந்த நிலையில், டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்படலாம் என்று வெளியான தகவலை அண்மையில் மத்திய அரசு மறுத்திருந்தது.
இருந்தாலும், லிங்க்டு-இன் இணையதளத்தில் டிக்டாக் நிறுவனம், இந்தியாவில் வேலைக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைக் கொண்டுப் பார்க்கும்போது, மீண்டும் டிக்டாக் காலடி வைக்கும் என்று தெரிகிறது.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.