புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூகநீதி – ஆறாவது மாநில மாநாடு!

புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூகநீதி

புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி – ஆறாவது மாநில மாநாடு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எழுமாத்தூரில், கடந்த 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. மாநாட்டில் தலைமைச் சிறப்பு விருந்தினராக, தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாநாட்டின் நுழைவு வாயில் மற்றும் மேடை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதைக் குறிக்கும் வகையில், தமிழகச் சட்டமன்றக் கட்டட வடிவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மாநாட்டில் இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு இருக்கையிலும் தனித்தனியாக, தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

தொண்டர்கள், மாநாட்டு மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைத் தெளிவாகக் காணும் வகையில், ஆங்காங்கே 9 இடங்களில் மிகப்பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையும் இயற்கையும், மாநாடு நடைபெற்ற நாளில் சிறுதூறல் கூட இல்லாமல், மாநாட்டிற்கு முழு ஒத்துழைப்பை அளித்தன. 

சரியாக மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கியது. மாநாடு தொடங்கியதும் பல்வேறு இயக்கங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் உரையாற்றினார்கள்.

மாலை 5.30 மணியளவில், புதிய திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு அரசு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினருமான கே.எஸ்.ராஜ்கவுண்டர் 60 அடி உயர மாநாட்டுக் கொடியை ஏற்றினார்.

சரியாக மாலை 6 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். அவருடன் முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி, அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், தோப்பு என்.டி.வெங்கடாசலம், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் வருகை தந்தனர். அவர்களைப் புதிய திராவிட கழகத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் பூங்கொத்து அளித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

அதன் பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டு மேடையின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களின் வரவேற்பைப் பெற்றார்.

தொடர்ந்து மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை கவுண்டர், திருப்பூர் குமரன், பொல்லான், வல்வில் ஓரி, கட்டுத்தறிக்காரன் குணாளன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், பன்னீர் கொண்டு வரவேற்பதற்குப் பதில் கண்ணீர் கொண்டு வரவேற்கிறேன் என்று தனது வரவேற்புரையைத் தொடங்கிய கே.எஸ்.ராஜ்கவுண்டர், சற்று நா தழுதழுத்தார். டிட்வா புயல் மழை வெள்ள நிவாரணப் பணிகள் உட்பட எத்தனையோ அரசுப் பணிகளுக்கு மத்தியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்திருப்பது கண்ணீரை வரவழைக்கிறது.

இந்த மேடையில் தனி மனிதனாக, பேச்சாளராக நான் நிற்கவில்லை. மிகப்பெரிய சமூகத்தின் சார்பாக நிற்கிறேன். கொங்கு மண்டலத்தில் 24 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகம், இந்த வேட்டுவ கவுண்டர் சமூகம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்கள் சமூகத்தினரின் பங்களிப்பு அதிகம். தமிழ்நாட்டில் எல்லா சமூகத்தினரையும் அரியணை ஏற்றி அழகு பார்த்தவர் நீங்கள். அது போல இந்த வேட்டுவ கவுண்டர் சமூகத்திற்கும் வரும் 2026-இல் அங்கிகாரம் அளிக்க வேண்டும். யாரையும் தாழ்த்தி, யார் உரிமையையும் பறித்து நாங்கள் உயர விரும்பவில்லை.

என்னுடன் இருந்து, ஒரு தந்தையைப் போல் வழிகாட்டி, சகோதரன் என்றழைத்து, இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற முழுக் காரணமாக இருந்தவர் அண்ணன் வி.செந்தில் பாலாஜி அவர்கள் என்று, கே.எஸ்.ராஜ் கவுண்டர் கூறிய போது, ஒட்டுமொத்த மாநாடும் ஆர்ப்பரித்தது.

அதைத் தொடர்ந்து, சுமார் 6.45 மணியளவில் தலைமையுரை ஆற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூகநீதி என்னும் 6-வது மாநில மாநாடு, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறுகிறது. சகோதரர் ராஜ் கவுண்டர் பேசும் போது, துணை முதல்வர் உதயநிதி வருவாரா மாட்டாரா என்று குழப்பத்தில் இருந்ததாகச் சொன்னார்.

நேற்று முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான மழை. விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. மழை பெய்து கொண்டேயிருக்கிறது, என்ன செய்யலாம் என்று அண்ணன் வி.செந்தில் பாலாஜி அவர்களிடம் கேட்டேன். தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மழை பெய்யும். ஆனால் எழுமாத்தூரில் மழை இருக்காது. தைரியமாகக் கிளம்பி வாருங்கள் என்றார். அவர் சொன்னது போல் மழை இல்லாமல் இந்த மாபெரும் மாநாடு தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த மாபெரும் மாநாட்டை நடத்த ராஜ் கவுண்டர் அவர்கள் எடுத்த முயற்சிகளை நான் அறிவேன். மாநாட்டை அறிவித்தோம், விளம்பரப்படுத்தி விட்டோம், எல்லோரும் வந்து விடுவார்கள் என்று இல்லாமல், அவரே ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று தனது இல்லத் திருமண விழாவிற்கு அழைப்பதைப் போல், ஒவ்வொருவரையும் அழைத்திருக்கிறார்.

அவர் பேசும் போது, இந்த மாநாட்டிற்கு வந்திருப்பவர்களில் 90 சதவீதம் பேர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பில் இருப்பவர்கள் தான். அனைவரும் பத்திரமாக வீட்டிற்குச் சென்று விட்டு, எனக்குத் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும் என்றார். அது தான் ஒரு தலைவருக்கான அழகு.

இந்த மண்ணிற்கும், இயக்கத்திற்கும் நான் புதியவன் கிடையாது. ராஜ் கவுண்டர் தனது இயக்கத்திற்குப் புதிய திராவிட கழகம் என்று பெயர் வைத்துள்ளார். திராவிடம் என்று பெயர் வைப்பது அவ்வளவு எளிதல்ல. டெல்லியில் இருந்து மிரட்டல் வரும். ஆரியம் – திராவிடம் என்பதில் சங்கிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்தச் சங்கிகளையெல்லாம் தாண்டி ஆளுநரே குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அதனால் தான் ஆளுநரின் திமிரை அடக்கிக் காட்டுவோம் என்றார் முதல்வர்.

திராவிடம் பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால், அதை அறிவாளிகளிடம் தான் கேட்க வேண்டும் என்கிறார். திராவிடம், எம்.ஜி.ஆர்., அண்ணா என, எல்லாவற்றையும் அவர் மறந்து விட்டார். தற்போது அவர் மனதில் மறக்காமல் இருப்பது அமித்ஷா மட்டும் தான். அ.தி.மு.க.வில், அமித்ஷா முன் யார் சிறந்த அடிமை என்னும் போட்டி நடைபெறுகிறது.

ஒரு வங்கிக்குப் பல கிளைகள் இருக்கும். அதன் தலைமையகம் சென்னை, டெல்லியில் இருக்கும். அதைப்போல அ.தி.மு.க. உட்பட பல கட்சிகளுக்குத் தலைமையிடம் டெல்லியில் இருக்கும் அமித்ஷா வீடு தான். அ.தி.மு.க.வில் இருக்கும் மூத்த முன்னாள் அமைச்சர்கள் கூட எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பதை, அமித்ஷா தான் தீர்மானிக்கிறார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு இந்தக் கூட்டமே சாட்சி. எஸ்.ஐ.ஆர். மூலம் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பறிக்க பா.ஜ.க. முயல்கிறது. இப்படிப்பட்ட அரசியல் சூழலில் தான் இன்று இந்த, வெல்லட்டும் சமூகநீதி மாநாடு நடைபெற்று வருகிறது.

இஸ்லாமியர், அருந்ததியர் இன மக்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்தது உட்பட, அனைத்துச் சமூக மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகளை வழங்கியது தி.மு.க. தீரன் சின்னமலை, பொல்லான், வல்வில் ஓரி ஆகியோருக்கு மணிமண்டபம் அமைத்து, சிலை அமைத்தது தி.மு.க. அதுபோல இந்த வேட்டுவ கவுண்டர் சமூகத்திற்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது முதல்வருக்குத் தெரியும். கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியது தி.மு.க. எனவே, தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, புதிய திராவிட கழகத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் வீரவாள் வழங்கிச் சிறப்பித்ததோடு, பல்வேறு இயக்கங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்குக் கேடயங்களைப் பரிசளித்தார்.

முன்னதாக மாநாட்டில், வேட்டுவ கவுண்டரின் உட்பிரிவுகளான வேட்டைக்காரர், வேட்டைக்கார கவுண்டர், பூலுவர், புன்னம் வேட்டுவ கவுண்டர், வில் வேடுவர், மலை வாழ் வேடுவர், வேட்டைக்கார நாயக்கர் உள்ளிட்ட பெயர்களில் உள்ள அனைவரையும் மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய திராவிட கழகத்திற்கு மூன்று தொகுதிகள் வழங்க வேண்டும்; வல்வில் ஓரிக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணி மண்டபம் கட்ட வேண்டும்; கொடிவேரி அணை கட்டிய செயங்கொண்ட கொங்காள்வானுக்கு கொடிவேரியில் வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டும்; குணாளன் நாடாருக்கு காங்கேயத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்; ஜாதிவாரி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பின்னர், கொங்கு மண்டலப் பகுதியில் புகழ் பெற்ற வள்ளிக்கும்மி நிகழ்ச்சியுடன் மாநாடு சிறப்பாக நிறைவு பெற்றது.


மு.உமாபதி


Discover more from செய்தி இதழ்

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?