தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்டம்பர் 28-ல் தொடக்கம் – யாருக்கெல்லாம் கிடைக்கும்?
செப்டம்பர் 28-ல் தொடங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திட்டத்தின் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் செப்டம்பர் 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்துக்கான அரசாணை கடந்த ஜூன் 23-ம் தேதி வெளியிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.
மோதிரத்தில் தனித்துவமான வரிசை எண்
திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு தங்க மோதிரத்துக்கும் தனித்துவமான வரிசை எண் (Unique Serial Number) இருக்கும்.
மேலும், மோதிரங்கள் சேதமடையாத வகையில் பாதுகாப்பான Tamper-proof Packaging முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இத்திட்டத்திற்காக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கும் மோதிரம்
திட்டம் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட்டாலும், அதற்கு முன்பாக ஜூன் 22, 2026 முதல் செப்டம்பர் 28 வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 107 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 28 முதல் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி பிறக்கும் குழந்தைகளுக்கு எப்போது வழங்கப்படும்?
திட்டம் தொடங்கப்படும் செப்டம்பர் 28-ம் தேதிக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்லும்போது தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
யாரெல்லாம் பயன்பெறலாம்?
இந்தத் திட்டத்தில் பயன்பெற சில அடிப்படை தகுதிகள் உள்ளன.
- அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்க வேண்டும்.
- குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
- கர்ப்பிணி PICME-யில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும் குழந்தைகள் திட்டத்தின் பயனைப் பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம்
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 7.80 லட்சம் குழந்தைகள் பிறப்பதாகவும், அதில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இதில் சுமார் 4.20 லட்சம் பிரசவங்கள், அதாவது 53 சதவீதம், அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. பாதுகாப்பான பிரசவத்தை ஊக்குவிப்பதும், அரசு மருத்துவச் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக அரசு தெரிவித்துள்ளது.
தாய்மாமன் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் திட்டம்
தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் குழந்தை பிறந்தபோது தாய்மாமன் சார்பில் சீர்வரிசை வழங்கும் மரபு உள்ளது. இந்தப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” வடிவமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தாய்-சேய் நலத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுடன் இணைந்து, அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு கூறியுள்ளது.

