தமிழகம் முழுவதும் தேர்தல் சூழல் தீவிரமாகி வரும் நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது, கண் துடைப்பு நாடகம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆட்சிக்கு இன்னும் சுமார் 70 நாட்களே மீதமிருக்க, திடீரென மடிக்கணினி திட்டத்தை அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் முயற்சி என விமர்சித்துள்ளார். மேலும், முதல்வருக்கான 5 நேரடி கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் எழுப்பிய 5 கேள்விகள்
1. ஆட்சிக்கு வந்த 55 மாதங்களுக்கு பிறகு மடிக்கணினி வழங்குவதன் காரணம் என்ன?
2. ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்திய திட்டத்தை நிறுத்த முயன்றதால் மாணவர்களிடம் கோபம் அதிகரித்தபின், கட்டாயமாக இந்த திட்டத்தை மீண்டும் அறிவித்தீர்கள் என்பதுதானே உண்மை?
3. திமுக-வின் கடந்த தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 163-ல் டேப்லெட் மற்றும் 10GB டேட்டா வழங்குவோம் என கூறப்பட்டது. ஆனால் 55 மாதங்களாக மடிக்கணினியும் இல்லை, டேப்லெடும் இல்லை — இதன் காரணம் என்ன?
4. அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிக்கு செல்லும் முன்பே மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்கள் ஏன் கவனிக்கப்படவில்லை?
5. கடந்த பட்ஜெட்டில் 20 லட்சம் மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போதோ 10 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என செய்திகள் வருகின்றன. மீதமுள்ள 10 லட்சம் மடிக்கணினிகள் எங்கே? கல்வித் துறையிலும் ஊழல் செய்ய வேண்டுமா?
இவ்வாறு அரைகுறையாகவும், விளம்பரத்திற்காகவும் திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் திமுக அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்; 2026 சட்டசபை தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.

