வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்குவது குறித்து விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “அவர் இங்கு தங்குவது முழுக்க அவருடைய தனிப்பட்ட முடிவு. அவர் விரும்பும் வரை இந்தியாவில் தங்கலாம்” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
வங்கதேசத்துடன் நிலையான மற்றும் நல்லுறவையே இந்தியா எப்போதும் விரும்புகிறது.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை காரணமாக ஷேக் ஹசீனா இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் இருந்து திரும்பிச் செல்லும் முடிவும் அவருக்கே உரியது.
வங்கதேசத்தில் நம்பகமான மற்றும் ஜனநாயக அரசியல் சூழல் உருவாக வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால விருப்பம்.
அங்கு முன்னர் தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்; இனி நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இழந்து நாடு துறந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அவர்மீது மாணவர்களை கொடூரமாக அடக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் முன்பு தொடரப்பட்ட மூன்று ஊழல் வழக்குகளுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவரை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.

