மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், அதற்கு அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும், நீதிமன்ற பாதுகாப்புக்காக இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை, தீபம் ஏற்றுவதற்கு மனுதாரருடன் துணையாகச் செல்லவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்த அனுமதி மறுத்த, அரசு தரப்புக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
இதனிடையே, தமிழக அரசோ, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள தர்ஹாவுக்கும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டிருப்பது தெரியாமல் மலையேற வருவோரை, போலீஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
நிலைமை சீராகும் வரை இந்த நடவடிக்கைகள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

