சென்னை:
தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவது மாபெரும் பொய் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
போட்டோஷூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் திமுக அரசு, ‘இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம் என்று ஒரு புதிய புரளியைக் கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது.
மக்களைப் பற்றி கவலைப்படாமல்; மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல்; மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கொடுக்காமல் வெற்று விளம்பரம் செய்யும் திறனற்ற அரசு என்று திமுக-வை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறோம். இதனை நிரூபிக்கும் வகையில் மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி வருகிறது.
இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம் என்பதும்; இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பதும், ஒரு மாய விளம்பரம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை.
பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளி விபரங்கள் எல்லாமே, முதல் முன்கூட்டிய மதிப்பீடு,இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு, தற்காலிக மதிப்பீடு, முதல் திருத்தப்பட்ட மதிப்பீடு, இரண்டாம் திருத்தப்பட்டமதிப்பீடு, மூன்றாம் திருத்தப்பட்ட மதிப்பீடு என 6 கட்டங்களாக வெளியிடப்பட்டு, அதன் பிறகே இறுதி மதிப்பீடு வெளியாகும்.
இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
இந்த கணிப்பு இறுதியானது அல்ல. என்பதும் அடுத்தடுத்த கணிப்புகளில் இது மாறலாம் என்பதுமே உண்மை. இதே புள்ளி விபரத்தில் 2022-23 ஆண்டு தமிழகத்தின் வளர்ச்சி மார்ச் 17ன் கணிப்பின்படி, 8.13 சதவீதம் என்று இருந்தது. ஆகஸ்ட் 1ம் தேதி கணிப்பில் 6.17 சதவீதம் என குறைந்துவிட்டது.
இவர்களுக்கு சாதகமான ஒரு புள்ளிவிபரம் வந்தவுடன் 2030ல் இவர்கள் கூறியபடி, தமிழகம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டியிடும் என்று போலியாக பெருமைப்படுகிறார்கள்.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது இவர்கள் தெரிந்தே மக்களை ஏமாற்றுவதற்குக் கூறும் மாபெரும் பொய். பொருளாதார வல்லுநர் டாக்டர் ரங்காஜன் தமிழ் நாட்டின் வளர்ச்சி நிலையை நிலையை ஆராய்ந்து வருபவர். தொடர்ந்து 14 சதவீத வளர்ச்சி பெற்றால் தான் 2030 ல் தமிழக அரசு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று கூறி இருக்கிறார்.
இந்த மதிப்பீட்டின் படி, தமிழக மக்களின் தனிநபர் வருவாய் உண்மையில் உயர்ந்துவிட்டதா என்றால் இல்லை என்பது தான் கள நிலவரம். இந்தநிலையில் டிரில்லியன் பொருளாதரத்தை எப்படி எட்ட முடியும்? ஆனால் திமுக அரசு தைரியமாக இந்தப் பொய்யை தொடர்ந்து சொல்லி வருகிறது. இப்படி பொய் பேசி மக்களை ஏமாற்றுவதே இவர்களின் வாடிக்கை.
திமுக அரசு உணர்ந்து வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இதைச் சொன்னால்கூட திமுக ஜால்ராக்கள், நாம் பொறாமையில் கூறுவதாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையை மக்களுக்கு உரக்கச் சொல்ல வேண்டியது நமது கடமை என்பதாலேயே இதனைக் கூறுகிறோம்.
இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.