அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் தரமற்றதாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 117 பேருக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை எம்பி வழங்கிய சைக்கிள்கள் சரியாக பொருத்தப்படாமலும், சில உதிரிபாகங்கள் இல்லாமலும் இருந்ததாக கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளிலும் தரமற்ற சைக்கிள்கள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் அதனை நீண்ட காலம் பயன்படுத்த முடியாமல், தங்களின் செலவில் பழுது பார்த்ததும், பலர் அதை விற்கும் நிலை ஏற்பட்டதும், செய்திகள் மூலம் தெரியவந்ததாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் இதே பிரச்சினை ஆண்டுதோறும் தொடர்வதற்கு காரணம் என்ன? இந்த சைக்கிளை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் யார்? எதற்காக தொடர்ந்து தரமற்ற சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன? என்பது அண்ணாமலை எழுப்பியுள்ள கேள்விகள்.
கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 17,782 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு சைக்கிள் விலை ரூ.4,300 என அரசு கூறும் நிலையில், அடிப்படை குறைபாடுகளுடன் மாணவர்களுக்கு வழங்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று அண்ணாமலை சாடியுள்ளார்.
கோவை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் சைக்கிள்கள் தர பரிசோதனை செய்யப்பட வேண்டும். சைக்கிள்களில் குறைகளுடன் வழங்கும் ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.

